சென்னை:
நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் நாளை திறக்கப்படுகிறது. மணி மண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். திறந்து வைக்கிறார்.
முதலில் மண்டப திறப்பு விழாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற நிலை இருந்தது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அது தொடர்பாக குஷ்பு மரியாதை குறைவான நடவடிக்கைகளை வெளிப்படுத்தி சிவாஜியை அவமதிக்காதீர்கள் என்று கருத்து வெளியிட்டார்.
தற்போது துணை முதல்வர் திறந்து வைப்பது பற்றி குஷ்பு கூறியதாவது:-
நடிகர் திலகம் திரை உலகில் மிகப்பெரிய நடிகர். குறிப்பாக தமிழ் திரை உலகில் ஈடு இணையற்ற நடிகராக இருந்தவர். அவருக்கு எந்த அளவு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஆனால் இந்த அரசுக்கு தெரிந்த மரியாதை இவ்வளவுதான். பலரும் கண்டித்த பிறகே துணை முதல்-அமைச்சரை அனுப்பி சமாளிக்கிறார்கள். சிவாஜிக்கு கொடுக்கும் இந்த மரியாதை போதுமானதல்ல.
மற்றவர்கள் சொல்லித்தான் ஒரு மாமனிதரை போற்ற வேண்டுமா? எதற்காக இந்த அரசு இப்படி செய்கிறது என்பது புரியவில்லை. ஆட்சி பொறுப்பை மக்கள் தந்து விட்டால் அவர்கள் மக்கள் சேவகர்களாகி விடுகிறார்கள். எந்த விதமான விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.
கவுரவம் மிக்க மாபெரும் நடிகரை கவுரவிப்பதில் இந்த அரசின் செயல்பாடு சரியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.