சென்னை பாலவாக்கத்தில் குடியிருக்கும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கெய்ட் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:-
சென்னையில் உள்ள சில தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னை டிரெக்கிங் கிளப் (சிடிசி) எனும் அமைப்பை 2013-ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். இந்த அமைப்புக்கு யாரும் தலைமை வகிக்கவில்லை. யாரிடமும் நன்கொடை வசூலித்ததில்லை.
இந்த நிலையில் இந்த அமைப்பில் உள்ள திவ்யா முத்துக்குமார், நிஷா ஆகியோர் மகளிர் தினத்தை முன்னிட்டு கொழுக்கு மலை மற்றும் குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு அமைப்பில் உள்ள அனுபவசாலிகளான அருண் பிரபாகர் மற்றும் விபின் தாமோதரன் ஆகியோர் உதவி செய்தனர்.
முறையான அனுமதி பெற்றே 27 பேருடன் மலைக்கு சென்றுள்ளனர். ஆனால், குரங்கணியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த நால்வர் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
27 பேரையும் காட்டுக்குள் அனுமதிக்க வனத்துறையினர் கட்டணம் வசூலித்துள்ளனர். அதற்கான ரசீது இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த நால்வரிடம் தான் இருந்தது.
அவர்கள் இறந்த காரணத்தால், 27 பேரும் சட்ட விரோதமாக அனுமதியில்லாமல் காட்டுக்குள் நுழைந்ததாக வனத்துறையினரும், போலீசாரும் கூறி வருகின்றனர். மலையேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை.
இந்த நிலையில் மலையேற்றப் பயிற்சிக்கு தலைமை வகித்ததாக கூறி குரங்கணி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது முற்றிலும் தவறானது. எனவே இந்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் குரங்கணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.
அதனையடுத்து ஏப்ரல் 12-ந்தேதிக்கு (இன்று) வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாகவும் அதுவரை மனுதாரரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தார்.