தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டது.
உயிருக்கு போராடிய 27 பேர் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 14 பேர் மதுரை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சென்னை வேளச்சேரியைச்சேர்ந்த நிஷா (வயது20) நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ ஏர்ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் உடல்நிலையை 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.