மூதாட்டி பலி 
செய்திகள்

குன்னம் அருகே தீக்குளித்த மூதாட்டி பலி

குன்னம் அருகே தீக்குளித்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கல்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மருதை மனைவி சோலையம்மாள்(வயது 60). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் சேலை மாட்டி தவறி கீழே விழுந்தார். இதில் இடது காலில் பலத்த அடிபட்டு அதிலிருந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சோலையம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து வீட்டுக்கு வெளியே உள்ள பூவரச மரத்தின் அடியில் தனக்குத்தானே ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சோலையம்மாள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உறவினர் தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.