சுவாமிமலை:
ஊதிய ஒப்பந்தம் மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தஞ்சாவூரிலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஈடுபட்டனர். இருப்பினும் தனியார் பஸ்கள் மற்றும் ஒருசில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லக் கூடிய அரசு பஸ் நேற்று மாலை 3 மணியளவில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சை மருதாநல்லூர் அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது44) ஓட்டிச் சென்றார். அப்போது கும்பகோணம் நான்குமுக்கு ரோடு பகுதியில் இருசக்கர மோட்டார் சைக்கிளில் தலையில் ஹெல்மெட் அணிந்து சென்ற 2 மர்மநபர்கள் பஸ்சின் மீது கல் வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து செந்தில்குமார் காயமடைந்தார். இதை பார்த்த பஸ் பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிப்பட்டது.
இதுகுறித்து செந்தில் குமார் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் டி.எஸ்.பி கணேஷமூர்த்தியிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில் அரசு பஸ்சை உடைத்து செந்தில் குமாரை காயப்படுத்தியது கும்பகோணம் அருகே உள்ள கோட்டையான் தோட்டத்தை சேர்ந்த கிறிஸ்டன் (47) என்பதும், போக்குவரத்து ஊழியர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பொது சொத்துக்கு குந்தகம் விளைவித்த வழக்கில் அவரை கைது செய்தனர்.