செய்திகள்

கும்பகோணம், ஒரத்தநாடு, பேராவூரணியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.6 லட்சம் பறிமுதல்

கும்பகோணம், ஒரத்தநாடு, பேராவூரணியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

மாலை மலர்

கும்பகோணம்:

அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியில் நேற்று இரவு பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சங்கர் (வயது 49) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் வைத்திருந்தார். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் பூ வியாபாரிக்கு சொந்தமானது என்றும் அவரிடம் தான் ஊழியராக வேலை பார்த்து வருவதாக சங்கர் தெரிவித்தார். உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்படி நேற்று ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெய்வாசல் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மன்னார்குடி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.3½ லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றி ஒரத்தநாடு துணை தாசில்தார் (தேர்தல்) செல்வக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் அருகே தேர்தல் ஆணையத்தின் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாட்டாத்தி கொல்லையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.80 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls