சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவையின் தலைவருமான குமரி அனந்தன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுவிலக்கு தற்போது தமிழகத்துக்கு அவசியமான தேவை ஆகும். ‘மதுவில்லா பாரதமே வேண்டும்’ என்று மகாத்மா காந்தி கூறினார். எனவே மதுவிலக்கு வேண்டும் என்பதோடு, நதிகள் இணைப்பை வலியுறுத்தியும் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையிலும் வருகிற 2-ந் தேதி சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே இருந்து நடைபயணம் தொடங்க உள்ளேன். இந்த நடைபயணம் 21-ந் தேதி தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நிறைவு பெறுகிறது.
எனது நடைபயணம் தொடக்கமாக காந்தி உருவம் பொறித்த கொடியை ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், பழ.நெடுமாறன், கி.வீரமணி, வைகோ, சு.திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், கனிமொழி எம்.பி., சரத்குமார், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என்னிடம் கொடுத்து வழியனுப்ப உள்ளனர். என்னுடன் நடைபயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் 9382155772 என்ற எண்ணில் என்னை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மதுவிலக்கு நடைபயண ஒருங்கிணைப்பாளர் அடையார் பாஸ்கர் உடனிருந்தார்.