நாட்டின் மிகச்சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த இவர், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடல் நேற்று பிற்பகலில் டெல்லி லோதி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
குல்தீப் நய்யாரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தினர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் குல்தீப் நய்யாரின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்த குல்தீப் நய்யார், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார். பத்திரிகையாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அவர் உருது, ஆங்கில மொழி பத்திரிகைகளில் சிறப்பாக பணியாற்றினார்.