செய்திகள்

என் மகனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுங்கள்: குல்பூ‌ஷன் தாயார் பாகிஸ்தானுக்கு கடிதம்

‘என் மகனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுங்கள்’ என பாகிஸ்தானுக்கு குல்பூ‌ஷன் ஜாதவ் தாயார் கடிதம் எழுதியுள்ளார்.

மாலை மலர்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்தது. ஈரானில் இருந்து பாகிஸ்தான் பலுசிஸ்தானுக்குள் நுழைந்து உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு ஈரானில் ஒரு நிறுவனம் நடத்தி வந்ததாகவும், அங்கிருந்து கடத்தி வரப்பட்டு பொய் குற்றம் சுமத்தி தண்டனை வழங்கி இருப்பதாகவும் இந்தியா தெரிவிக்கிறது.

மரண தண்டனையை ரத்து செய்யும் படி பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டு கொண்டது. அதற்கு பாகிஸ்தான் மறுக்கவே இந்தியா சர்வதேச கோர்ட்டை நாடியது. இந்தியாவின் மனுவை விசாரித்த கோர்ட்டு இந்த வழக்கு விசாரணை முடியும் வரை குல்பூ‌ஷன்ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என தடை விதித்தது.

மேலும், அவரை இந்திய தூதர் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது, அது பாகிஸ்தானுக்கு பலத்த தோல்வி என கருதப்படுகிறது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் ஆலோசகர் சரதாஷ் ஆசீஷ் இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஜாதவ் மீதான வழக்கில் சர்வதேச கோர்ட்டில் பாகிஸ்தானுக்கு தோல்வி என கூறுவதை ஏற்க முடியாது.

ஏனெனில் ஜாதவ் மர தண்டனைக்கு தான் சர்வதேச கோர்ட்டு தடை விதித்துள்ளது. அதேநேரத்தில் அவருடன் இந்திய தூதர் சந்திக்க அனுமதிக்கும் படி உத்தரவிடவில்லை. அடுத்த தடவை வலுவான சட்டக் குழு சர்வதேச கோர்ட்டில் ஆஜராகி தங்களது திறமையான வாதத்தை எடுத்து வைக்கும்.

மேலும் குல்பூ‌ஷன் ஜாதவின் தாயார் பாகிஸ்தான் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தனது மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு பரிசீலனை செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.