செய்திகள்

கேரளாவுக்கு பஸ்சில் சாராயம் கடத்திய குலசேகரம் வாலிபர் கைது

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு நேற்று அரசு பஸ்சில் சாராயம் கடத்திய குலசேகரன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் பொருட்கள் அதிக அளவு கடத்தப்படுகிறது. இவற்றை அதிகாரிகள் கண்காணித்து பறிமுதல் செய்து வருகிறார்கள். இதைப்போல கஞ்சா மற்றும் சாராயம் போன்ற போதை பொருட்களும் நூதன முறையில் கடத்தப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று கேரள அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சில் சாராயம் கடத்தப்படுவதாக கேரள- குமரி எல்லையில் உள்ள அமரவிளை சோதனைச் சாவடி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அந்த பஸ் அமரவிளை சோதனைச் சாவடியில் சென்ற போது அதை தடுத்து நிறுத்திய போலீசார் அந்த பஸ்சில் ஏறி அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பஸ்சின் இருக்கைக்கு கீழே ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதை எடுத்து சோதனை செய்த போது ஒரு கேனில் 5 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் அரசு பஸ்சில் சாராயத்தை மறைத்து கடத்தியவர் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மோகனன்(வயது45) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து சாராயத்தையும் கைப்பற்றினார்கள்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குமரி மாவட்டத்தில் இருந்து இதுபோல அடிக்கடி அவர் பஸ்சில் கேரளாவுக்கு சாராயம் கடத்தியது தெரியவந்தது. #tamilnews