வறண்டு கிடக்கும் தடுப்பணைகள். 
செய்திகள்

குடிமங்கலம் பகுதியில் வறண்டு கிடக்கும் தடுப்பணைகள்

உப்பாறு ஓடையில் கட்டப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

மாலை மலர்

குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் ,உடுமலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர், தங்கம்மாள் ஓடையில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு உப்பாறு ஓடைக்கு செல்கிறது.

1965ம் ஆண்டு உப்பாறு அணை கட்டப்பட்டது. உப்பாறு அணையின் மூலம் நேரடியாகவும். மறைமுகமாகவும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பி.ஏ.பி. திட்டத்தில் 2 மண்டல பாசனம் செயல்பாட்டில் இருந்தபோது உப்பாறு அணைக்கு பிரதான கால்வாயில் ,குடிமங்கலம் அருகேயுள்ள அரசூர் ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்படும்.

அரசூர் ஷட்டரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அரசூர், அம்மாபட்டி, ஆமந்தகடவு பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக உப்பாறு அணைக்கு செல்லும்.

உப்பாறு ஓடையில் கட்டப்பட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டத்திற்கு உதவியாக இருக்கும். பி.ஏ.பி திட்டம் 1994ம் ஆண்டு முதல் நான்கு மண்டல பாசனமாக விரிவுபடுத்தப்பட்டது. இதனால் பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

குடிநீர் தேவைக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி சில முறை மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது.

மேலும் உப்பாறு ஓடையில் கட்டப்பட்ட தடுப்பணைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. இதனால் உப்பாறு ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் கிணற்றுப்பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் சாகுபடி பரப்பளவு குறைந்துவருகிறது.