புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நியூட்ரினோ, நெடுவாசல் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிப்பு போன்ற தொழில் சார்ந்த நிறுவனங்கள் தொடங்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக இயற்கை வளத்தை பயன்படுத்தி மத்திய-மாநில அரசுகள் தொழிற்சாலைகளை உருவாக்கி உள்ளன. ஆனாலும் இதில் நல்லது எது? கெட்டது எது? என ஆய்வு நடத்தப்படவில்லை.
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியுடன் தொடங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.
இதற்காக மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அதுபற்றி எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
1994-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். எல்லா நோய்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம் என தூத்துக்குடி மக்கள் நினைக்கிறார்கள். அதை போக்க வேண்டியது மத்திய-மாநில அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.