செய்திகள்

கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை- தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி பாராட்டு

கஜா புயல் குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயலாற்றி உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். #TNGovt #GajaCyclone #Krishnasamy

மாலை மலர்

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:‍-

தேவந்திரகுல வேளாள‌ர்களை பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்ப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். பட்டியல் இனத்தில் 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என மாற்றம் செய்யவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற‌ன.

20 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் கட்சியாக புதிய தமிழகம் உள்ளது. 8 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றிபெறும். தேர்தலில் இணைந்தோ அல்லது தனித்தோ தேர்தலை சந்திக்க தயார் நிலையில் புதிய தமிழகம் கட்சி உள்ளது.

கஜா புயல் குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயலாற்றி உள்ளது. அதற்கு பாராட்டுக்கள். புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளை அரசு இன்னும் தீவிர‌மாக செயல்படுத்தவேண்டும்.

தமிழகத்தில் அநாகரீக‌மான அரசியல் நடைபெறுகிறது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவி செய்யுங்கள். அதை வைத்து அரசியல் செய்யாதீர்கள். நிவாரண உதவிகள் வழங்குவதிலும் அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் சிலர் தூண்டுதலின்பேரில் நல உதவிகள் வழங்கப்படுவது தடுக்கப்படுகிறது.