செய்திகள்

கிருஷ்ணகிரியில் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.70 ஆயிரம் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.70 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் போக்குவரத்து அதிகாரிகள் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகன பதிவு மற்றும் லைசன்ஸ் பெறுவது உள்பட பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. (பொறுப்பு) கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை அதிரடியாக அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

பின்னர் அங்குள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். அப்போது ரூ. 70 ஆயிரத்து 300 ஐ அங்குள்ள ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

அந்த பணத்திற்கு ஆர்.டி.ஓ. (பொறுப்பு) மோகன் மற்றும் அதிகாரிகள் சரியான கணக்கு சொல்லததால் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இவர் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் பொறுப்பு அதிகாரியாக உள்ளதால் அங்கும் இது போல லஞ்சம் வாங்கினாரா? என்பது குறித்தும் தொடர் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்களிடமும் தனி தனியாக விசாரணை நடந்தது.

பின்னர் இன்று காலை அங்கிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் போக்குவரத்து அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.