திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 16-ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆட்சி செய்த கிருஷ்ணதேவராய மன்னர் ஏராளமான தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய தகவல் கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு இருப்பதை 2011-ம் ஆண்டு ஐதராபாத் தொல்லியல் துறை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது. மேலும் தற்போது கோவிலில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் பட்டியலில் கிருஷ்ணதேவராய மன்னர் வழங்கிய ஆபரணங்கள் குறித்த தகவல் எதுவும் காணப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்துக்கு இதுபற்றி அய்யங்கார் கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு விரிவாக ஆய்வு செய்தார். பின்னர், அய்யங்கார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி இந்திய தொல்லியல் துறை, மத்திய கலாசார அமைச்சகம், ஆந்திர அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றுக்கு அவர் உத்தரவிட்டார்.