செய்திகள்

வருகிற ஜனவரி 6-ந்தேதி சென்னை கோவளத்தில் ஜல்லிக்கட்டு: 300 காளைகள் பங்கேற்பு

சென்னையின் புறநகரான கோவளத்தில் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 6-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இப்போட்டி 100 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு கடும் போராட்டத்துக்கு பின் கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு இதுவரை சென்னையில் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 6-ந்தேதி சென்னை அருகே நடைபெறுகிறது.

அது குறித்து சென்னை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழர்களின் வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு இதுவரை சென்னையில் நடைபெறவில்லை. எனவே 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட சென்னை மக்கள் ஜல்லிக்கட்டை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, சென்னையின் புறநகரான கோவளத்தில் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 6-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இப்போட்டி 100 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது.

இதில் மதுரை உள்பட 15 மாவட்டங்களில் இருந்து காளைகள் வரவழைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு கலாசாரத்துடன் கூடிய பாரம்பரிய விளையாட்டு எனவே, இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

ஜல்லிக்கட்டு போட்டியை காண அரசியல் தலைவர்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை அழைக்க இருக்கிறோம். மேலும் சினிமா நடிகர்கள் ரஜினி காந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்க இருக்கிறோம்.

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.80 லட்சம் பரிசளிக்கப்படும். அனைத்து மாடு பிடி வீரர்களுக்கும் மெடிக்கல் இன்சூரன்சு பெறப்படும் என்று சென்னை ஜல்லிக்கட்டு பேரவை செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி கூறினார்.