திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நடிகை கோவை சரளா பிரசாரம் செய்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர், நிலையூர், கைத்தறி நகர், ஹார்விபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது:-
மக்களிடம் வாக்குக்கு பணம் கொடுத்துவிட்டு அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்றனர். பணத்தின் மீது மக்களுக்கு ஆசையை தூண்டிவிட்டு அடிமையாக்கி வருகின்றனர்.
இவ்வளவு காலம் ஆட்சி செய்தவர்கள் சாலை வசதிகள் கூட செய்துதரவில்லை.
நாங்கள் அரசியல்வாதி கிடையாது. எப்போதும் மக்களோடு, குடும்பத்தினராக உள்ளோம். எங்களுடைய வேட்பாளர் மக்களுக்காக செயல்படவில்லை என்றால் உடனே ராஜினாமா செய்வார்.
தேர்தலில் வெற்றி பெற வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல் கட்சியினர் ஏதும் செய்யாமல், தங்களது குடும்பத்தினர்களுக்கே சொத்து சேர்க்கின்றனர்.
ஆட்சியில் இருக்கும் போது ஏதும் செய்யாமல் தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழி வந்தவர் தான் கமல்ஹாசன். அவரை பார்த்து சிலர், இவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? என்று நக்கல், நையாண்டி செய்கின்றனர்.
கமல்ஹாசனை பார்த்து உங்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? என்று கேட்பவர்கள் அனைவரும் பிறக்கும்போது அரசியல் கட்சியின் துண்டை போர்த்திக் கொண்டா பிறந்தார்கள்?