படுகொலை செய்யப்பட்ட ‌ஷர்மிளா. தற்கொலை செய்து கொண்ட சிபு 
செய்திகள்

கோட்டயம் அருகே கள்ளக்காதலியை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை

கோட்டயம் அருகே கள்ளக்காதலியை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கோட்டயம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி குஞ்சுமோள் என்ற ‌ஷர்மிளா (வயது 40). ‌ஷர்மிளா அதே பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஊழியராக இருந்தார்.

மேத்யூ கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சிபு (42). ஆட்டோ டிரைவர்.

நேற்று மாலை ‌ஷர்மிளா வீட்டிற்கு முன்பு நின்றார். அப்போது அரிவாளுடன் வந்த ஆட்டோ டிரைவர் சிபு அங்கு நின்ற ‌ஷர்மிளாவை வெட்டினார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் அலறி சத்தம்போட்டார்.

அலறல் சத்தம்கேட்டு ‌ஷர்மிளாவின் கணவர் வீட்டில் இருந்து எழுந்து வந்தார். மனைவி வெட்டுக்காயங்களுடன் இருப்பதை கண்டு அருகில் சென்று தடுக்க முயன்றார். அப்போது பொதுமக்களும் அங்கு வந்தனர்.

எனினும் ‌ஷர்மிளாவின் கணவரை தள்ளி விட்டு மற்றவர்களை அரிவாளை காட்டி ஆட்டோ டிரைவர் மிரட்டினார். பொதுமக்கள் பயந்து நகர்ந்தனர். இந்த சந்தர்ப்பதை பயன்படுத்திய ஆட்டோ டிரைவர் ‌ஷர்மிளாவை சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பொதுமக்கள் மீண்டும் ஓடி வந்துபார்த்தனர். அப்போது ‌ஷர்மிளாவின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். ‌ஷர்மிளாவை மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வெட்டுகாயம் அடைந்த ‌ஷர்மிளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோட்டயம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோ டிரைவரை தேடினர். இந்நிலையில் ‌ஷர்மிளா வீட்டின் பின்புறம் உள்ள ஒரு காட்டு பகுதியில் மயங்கிய நிலையில் சிபு கிடந்தார். அருகில் சென்று பார்த்தபோது ‌ஷர்மிளாவை வெட்டிய அதே அரிவாளால் தனது இரண்டு கை மணிக்கட்டு நரம்புகளையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

போலீசார் அவரை மீட்டு அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிபுவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் வங்கிக்கு ‌ஷர்மிளா தினமும் சிபு ஆட்டோவில் தான் சென்று வருவார். கணவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிபிக்கும், ‌ஷர்மிளாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கள்ளக்காதலியை ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்து தற்கொலை செய்திருக்கலாம் என்று அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.