செய்திகள்

கொடுங்கையூர் தீ விபத்தில் இன்று மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கொடுங்கையூர் தீ விபத்தில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் கூறினார்.

பெரம்பூர்:

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் பேக்கரி கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயணைப்பு படை வீரர் ஏகராஜ் தீக்காயம் அடைந்து உயிர் இழந்தார்.

இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள், பேக்கரி கடை உரிமையாளர் என 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 15 பேர் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் அடைந்த 2 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தனர். நேற்று மேலும் 2பேர் உயிர் இழந்தார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக இருந்தது.

இன்று காலை மேலும் ஒருவர் இறந்தார். அவரது பெயர் கண்ணன், கொடுங்கையூர் பார்வதி நகரை சேர்ந்தவர்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் வசந்தாமணி கூறியதாவது:-

கொடுங்கையூர் பேக்கரி கடை தீவிபத்தில் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில் 4 பேர் உயிர் இழந்துள்ளனர். ஆனந்தன், முகிலன் ஆகிய இருவரும் வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் இங்கு கொண்டு வரப்பட்டனர்.

அவர்களும் உயிர் இழந்ததால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது.

இன்னும் 15 பேர் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 12 பேர் 40 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் அடைந்தவர்கள். 3 பேர் மட்டுமே லேசான தீக்காயம் உடையவர்கள். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருபவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.