வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசனையொட்டி நாகை மாவட்டம் மற்றும் வெளிமாவட்டம் மீனவர்கள் ஏராளமானோர் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் செருதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், புவனேஷ், பாலு ஆகிய மூவரும் தனித்தனி படகில் 10க்கு மேற்பட்ட மீனவர்களுடன் நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மாவட்ட மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்தும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன், நண்டு உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களையும், திசைக்காட்டும் கருவியையும் பறித்து கொண்டனர்.
மேலும் மீனவர்களை கடுமையாக தாக்கியதோடு இது குறித்து யாரிடமும் புகார் செய்ய கூடாது என்று மிரட்டி விரட்டி அடித்துள்ளனர்.
நாகை மீனவர்களை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் இதனால் மீன்பிடி தொழிலுக்கு மீனவர்கள் செல்வது குறைந்து வருகிறது.