பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் பற்றி எரிந்த காட்டு தீயால் மரங்கள் எரிந்து நாசமாகின.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மழை குறைந்து போனதால் பசுமை பரப்பளவு குறைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே காட்டு தீ பற்றி அரியவகை மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகி வருகின்றன.
மேலும் வன விலங்குகளும் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வறட்சியினால் பயிர்கள் எரிந்து நாசமாகி உள்ளன. பொதுமக்களும் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் அப்சர் வேட்டரி, பெருமாள்மலை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு தீ பற்றி எரிந்தது. வனத்துறையினர் சென்று அதனை அணைத்தனர். இருந்தபோதும் பெருமளவில் சேதம் ஏற்பட்டது.
வனத்துறையினர் தீ தடுப்பு கோடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதும் வனப்பகுதியில் தீ பற்றுவது தொடர் கதையாகி வருகிறது. கீழ்மலை பகுதியான பெரும்பாறை அருகே வத்தலக்குண்டு சாலையில் காட்டுத்தீ பற்றியது. பெரும்பள்ளம் பகுதியிலும் தீ வேகமாக பரவியது. இதனால் மரங்கள், செடிகொடிகள் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீ தடுப்பு பணியினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ பற்றுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.