கோவை:
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 23). இவர் கோவை ஆர்.எஸ். புரம் சம்பந்தம் ரோடு பகுதியில் தங்கி இருந்து தங்க நகை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது நண்பரான ஹைதர் அலி என்பவருடன் சர் சண்முகம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இவர்களை 2 பேர் மொபட்டில் பின் தொடர்ந்து வந்தனர். திடீரென அவர்கள் அசோக்கை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்து இருந்த ரூ. 12,500 ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த அசோக் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அப்போது மொபட்டில் சென்றவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். விழுந்த வேகத்தில் பின்னால் அமர்ந்து சென்ற வாலிபர் எழுந்து தப்பி ஓடி விட்டார். மொபட் ஓட்டி வந்தவரை அங்கு இருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து ஆர். எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் செல்வபுரம் என்.எஸ்.கே. வீதியை சேர்ந்த யுவராஜ் (24) என்பது தெரியவந்தது.
தப்பி ஓடியவர் செல்வபுரம் வடக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சதாம் (20) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சதாமை வலைவீசி தேடி வருகிறார்கள்.