வழிப்பறி 
செய்திகள்

ஏர்வாடி அருகே ஆம்புலன்ஸ் டிரைவரிடம் வழிப்பறி செய்த மர்ம கும்பல்

ஏர்வாடி அருகே கத்தியை காட்டி மிரட்டி ஆம்புலன்ஸ் டிரைவரிடம் வழிப்பறி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

களக்காடு:

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சபரி ராஜன் (வயது 24). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். சபரிராஜன் நேற்று வள்ளியூரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நோயாளியை ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

ஏர்வாடியை அடுத்த ஆலங்குளம் அருகே செல்லும் போது ஆம்புலன்ஸ் என்ஜினில் எதிர்பாராதவிதமாக கோளாறு ஏற்பட்டு நின்றது. பின்னர் சபரிராஜன் நோயாளியை மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர் மட்டும் ஆம்புலன்சை பழுது பார்ப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், சபரிராஜனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்றனர். இது குறித்து சபரிராஜன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.