செய்திகள்

அரசு திட்டங்களை முறையாக கண்காணிப்பது தடை ஆகாது - நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

அரசின் திட்டங்களை முறையாக கண்காணிப்பது தடை ஆகாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவையில் இலவச அரிசி வழங்கும திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி தடையாக இருப்பதாகவும், இது போல் பல திட்டங்களை அவர் முடக்குவதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி அளித்துள்ள விளக்கத்தில் கூறி இருப்பதாவது:-

அரசு நிர்வாக செயல்பாட்டின்படி கருவூலத்தில் உள்ள பணம் முறையாக செலவிடப்பட வேண்டும். எந்தவித சுயநலம் தொடர்பான வி‌ஷயங்களுக்கும் பணம் சென்று விடக்கூடாது.

இதை முறையாக கண்காணிப்பது நிர்வாகியின் வேலை. எனவே, அரசின் திட்டங்களை கண்காணித்து செயல்படுத்துவதை எப்படி தடை என்று சொல்ல முடியும்? ஒரு கவர்னரின் கடமை என்ற முறையில் ஒவ்வொரு செலவினமும் கண்காணிக்கப்படுகிறது.

பொது பணம் முறையாக செலவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு கவர்னருக்கு இருக்கிறது. ஏழைகளுக்காக செலவிடும் பணம் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும். இதில், எந்த சுயநலமும் இடம் பெற்று விடகூடாது.

மக்களுக்கான திட்டங்கள் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். அதை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.