செய்திகள்

டிரம்ப்புடனான சந்திப்பில் தான் கொல்லப்படலாம் - வடகொரிய அதிபர் அச்சம்

அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit

பியாங்யோங்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப்புக்கு முன்னதாக கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள்.

இந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயி்றன்று தனது ராணுவ தளபதிகள் மூவரை திடீரென மாற்றினார்.

மேலும், தென்கொரியாவிலும் சில நபர்கள் தன்னை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாக கிம் ஜாங் அன்னுக்கு செய்தி கிடைத்துள்ளதும் அவரது உயிர் பயத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, சந்திப்பு நிகழும் செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இதற்கிடையே, செண்டோசா ரிசார்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit

SCROLL FOR NEXT