செய்திகள்

ஊட்டியில் ஆற்றில் சிக்கிய கர்ப்பிணி யானை சிகிச்சை பலனின்றி பலி

ஊட்டி அருகே சிங்காரா ஆற்றில் உள்ள சேற்றில் கர்ப்பிணி யானை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

மாலை மலர்

ஊட்டி:

ஊட்டி அருகே சிங்காரா ஆற்றில் உள்ள சேற்றில் கடந்த 30-ந் தேதி ஒரு காட்டு யானை சிக்கி கொண்டது. யானையால் வெளியே வர முடியாததால் தவித்தது.

இதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைக்கு முதலுதவி செய்தனர். அப்போது யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கும்கி யானை உதவியுடன் காட்டுயானையை சேற்றில் இருந்து வெளியே மீட்டனர். இதன்பின்னர் கர்ப்பிணி யானைக்கு கால்நடை மருத்துவர் மனோகரன் சிகிச்சை அளித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை கர்ப்பிணி யானை சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தது.

பின்னர் யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.