செய்திகள்

குடிபோதையில் 3 மாத கைக்குழந்தையை அடித்து கொன்ற தாய்

அசாமில் மூன்று மாத கைக்குழந்தை அழுது கொண்டு இருந்தபோது குடிபோதையில் தாய் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

கவுகாத்தி:

அசாம் மாநிலம் நாகோம் மாவட்டம் பொற்கொலா என்ற இடத்தை சேர்ந்தவர் ருப்ஜோதி. இவரது கணவர் கூலித்தொழிலாளி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 வயது மகள் இருக்கிறார். 3 மாதத்திற்கு முன்பு மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

ருப்ஜோதிக்கு குடிப்பழக்கம் உண்டு. கடந்த 31-ந்தேதி போதையில் இருந்தார். அப்போது அவரது 3 மாத குழந்தை அழுது கொண்டே இருந்தது. குழந்தையை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து அழுதது.

இதனால் எரிச்சல் அடைந்த ருப்ஜோதி குழந்தையை சரமாரியாக அடித்தார். இதில் குழந்தை இறந்துவிட்டது. இதை மறைப்பதற்காக அந்த குழந்தையின் பிணத்தை அருகில் உள்ள குட்டையில் வீசிவிட்டார்.

பின்னர் வீட்டில் இருந்த குழந்தையை காணவில்லை என நாடகமாடினார். இதுபற்றி போலீசில் புகார் கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் குட்டையில் வீசப்பட்ட குழந்தையின் பிணம் தானாக மிதந்தது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன.

எனவே தாயார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரிடம் விசாரித்த போது நான் தான் கொலை செய்தேன் என்று ஒத்துக்கொண்டார். அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.