செய்திகள்

சேலத்தில் பள்ளி மாணவி கடத்தல்- தந்தை புகார்

சேலத்தில் பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் சிவதாபுரம் அருகே பெருமாப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவரது 17 வயது மகள் பெருமாப்பட்டி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பள்ளி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதுகுறித்து செல்வம் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது பள்ளி மாணவி காப்பக விடுதியில் தங்க வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவரை செல்வம் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் பள்ளி மாணவி மாயமானார். உடனே செல்வம் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து மாணவியின் தந்தை சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்து மகள் மாயமானதை குறித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

எங்கள் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அத்தியப்பன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ்-2 படிக்கும் எனது மகளிடம் கேலி, கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் எனது மகள் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் அத்தியப்பனை அழைத்து கண்டித்தனர்.

தற்போது எனது மகள் மாயமாகி உள்ளார். மகளை அத்தியப்பன் கடத்தி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது மகளை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.

அதன்பேரில் இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அத்தியப்பன் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு அவர் இல்லை. தொடர்ந்து போலீசார் மாணவியையும், அத்தியப்பனையும் தேடி வருகின்றனர். #tamilnews