பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று (25-ம் தேதி) தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோய், கொரியாவின் லீ ஹியூனை எதிர்த்து விளையாடினார்.
இப்போட்டியின் முதல் சுற்றை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் பிரனோய் கைப்பற்றினார். அடுத்த சுற்றிலும் சிறப்பாக விளையாடிய பிரனோய் இரண்டாவது சுற்றையும் 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் 21-15, 21-19 என்ற நேர் செட்களில் எச்.எஸ். பிரனோய் வெற்றி பெற்றார்.
இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் - தாய்லாந்து வீரர் கோசித் பெட்பிரதாப் பலப்பரீட்சை செய்தனர். இப்போட்டியில், சாய் பிரனீத் 21-13, 21-23, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் - ஜெர்மனி வீரர் பேபியன் ரோத் இடையேயான மற்றொரு முதல் சுற்று போட்டியிலிருந்து பேபியன் ரோத் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், டென்மார்கின் லைன் ஜார்ஸ்ஃபெல்டை எதிர்கொண்டார். இப்போடியில் 21-14, 11-21, 21-10 என்ற செட்கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார்.