திருவனந்தபுரம்:
இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது.
காசர்கோடு அருகே கும்பலா பகுதியில் இருந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்த நபர் கடந்த மாதம் முதல் வாரம் கேரளா திரும்பினார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆனது. அவர் மூலம் அந்த நபரின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கணவன் -மனைவி இருவரையும் பரியராம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவி இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கணவரை வீட்டுக்கு அனுப்பிய டாக்டர்கள், அவரது மனைவிக்கு பிரசவ நேரம் நெருங்கியதால் அவரை மட்டும் ஆஸ்பத்திரியில் தங்க வைத்தனர்.
நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல உடல் நலத்துடன் 3 கிலோ எடையுடன் காணப்பட்டது. தற்போது காயும், சேயும் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருப்பதாக அவருக்கு பிரசவம் பார்த்த அரசு டாக்டர்கள் தெரிவித்தனர். கொரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருப்பது கேரளாவில் இதுவே முதல் முறை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பெண் கடந்த 10-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டதால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கரூரைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்களிடம் இருந்து நோய் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது.