திருவனந்தபுரம்:
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீகார்யம் பகுதியில் ராஜேஸ்(34) என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர் மீது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த ராஜேஸ் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் ராஜேஸ் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த படுகொலைக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தான் காரணம் என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. படுகொலையை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய பந்த்-க்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. இதனால் கேரளாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, கேரளாவில் நடைபெறும் முழு அடைப்பால் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பேருந்துகள் களியக்காவிளை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.