செய்திகள்

சீனாவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க கேரள மந்திரிக்கு அனுமதி மறுப்பு

கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனை சீனாவில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றுகேரள முதல்-மந்திரி பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

ஐக்கிய நாட்டு சபையின் கீழ் செயல்படும் உலக சுற்றுலா அமைப்பின் சார்பில் சீனாவில் வருகிற 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சுற்றுலா கருத்தரங்கு நடக்கிறது.

இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி கேரள சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து கருத்தரங்கில் பங்கேற்க அனுமதி கேட்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பினார்.

ஆனால் மத்திய அரசு, மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் சீனா செல்ல அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பான கடிதம் நேற்று மத்திய வெளியுறவுத் துறையில் இருந்து கேரள அரசிற்கு வந்தது.

அனுமதி மறுக்கப்பட்டதற்கான முறையான விளக்கம் எதுவும் அந்த கடிதத்தில் கூறப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையே மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனை சீனாவில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.