செய்திகள்

தேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது - சுப்ரீம் கோர்ட்

சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது என்று சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. #SC #Devaswomboard

மாலை மலர்

புதுடெல்லி:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.

இதுபோல கேரளாவின் வேறு சில கோவில்கள் கொச்சின் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவில்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் அரசின் வெளிப்படை தன்மை பற்றி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.

இது தொடர்பாக சுப்பிரமணிய சாமியும், மோகன்தாஸ் என்பவரும் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

கேரள ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தது. இதில் அரசின் நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை என கூறியது. இதையடுத்து சுப்பிரமணிய சாமியும், மோகன்தாசும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மனு தொடர்பாக சில அறிவுறுத்தல்களை கேரள அரசுக்கு வழங்கியது. அதில் தேவசம் போர்டு நிர்வகிக்கும் கோவில்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பைசா கூட அரசின் கஜானாவுக்கு போகக்கூடாது. அவை அனைத்தும் தேவசம்போர்டின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். மேலும் தேவசம் போர்டின் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்றும் கூறி உள்ளது. #SC #Devaswomboard