செய்திகள்

தேரா சச்சா தலைவரை ஆதரித்த சாக்‌ஷி மகராஜ் எம்.பி.க்கு கேரள முதல் மந்திரி கண்டனம்

கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு ஆதரவாக சாக்‌ஷி மகராஜ் கருத்து தெரிவித்தார். இதற்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு ஆதரவாக பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ் கருத்து தெரிவித்தார். இதனால் சாக்‌ஷி மகராஜுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறுமியை கற்பழித்த குற்றவாளியை மிகப்பெரிய ஆன்மா என்று அவர் வர்ணித்தது, சங்பரிவாரின் மனிதத்தன்மையற்ற முகத்தை காட்டுகிறது. குற்றவாளியை காப்பாற்றுவதற்காக பாதிக்கப்பட்டவரை இழிவுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். பிரதமர் உள்பட பா.ஜனதா தலைவர்கள் அமைதி காப்பதன் மூலம் சாக்‌ஷிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.