ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் அவரது பின்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டனர்.
அன்றைக்கு சசிகலாவை எதிர்த்ததில் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் மற்றும் நானும் ஒருவன்.
ஆனால் இதில் யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர் செல்வம் பார்த்திருக்கிறார் என்றால் இவர் பின்னால் நின்ற எங்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் முட்டாள் ஆக்கி விட்டார்.
அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனுஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.
இவர் ஏன் ரகசியமாக சென்று சந்திக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி விட்டு தான் சந்திக்க வந்துள்ளார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்பட யாரிடமும் சொல்லாமல் அவர் மட்டும் ரகசியமாக சென்று சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.
இதில் இன்னும் பல கேள்விகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் விடை சொல்லாமல் உள்ளார்.
1. தினகரனை சந்தித்து பேசிய போது என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை முழுமையாக சொல்லவில்லை.
2. கோட்டூர்புரத்தில் யாருடைய வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது?
4. கடந்த வாரம் தினகரனை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.
இதையெல்லாம் பார்க்கும் போது தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பி முட்டாள் ஆக்குகிறார்கள்.
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் என்ற அளவில் அரசியல் களத்தை அமைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்.