கிணத்துக்கடவில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தாமோதரன் பேசியபோது எடுத்த படம். 
செய்திகள்

1 கோடி தொண்டர்கள் ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவாக உள்ளனர்: கே.சி.பழனிசாமி

உறுப்பினர் அட்டையோடு 1 கோடி தொண்டர்கள் ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவாக உள்ளனர் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கூறினார்.

மாலை மலர்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இதேபோல் வருகிற 25-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதுதொடர்பாக கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவை தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன், எம்.எல்.ஏ.க்கள் ஓ.கே.சின்னராஜ், பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் கோவை புறநகர்பகுதியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் முன்னாள் எம்.பி .பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

கோவையில் வருகிற 25-ந்தேதி ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டம் தமிழகத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும். எதிர்கட்சி அணியை சார்ந்தவர்கள் ஏதோ இணைப்பு என நாடகத்தை நடத்தி கொண்டுள்ளனர். எங்களோடு யார் வந்து சேர்வது என்றாலும் தகுதி தராதரத்தை பார்த்து நாங்கள் சேர்த்து கொள்வோம்.

நாங்கள் சென்று இணைய வேண்டிய அளவிற்கு இல்லை. 95 சதவீதத்திற்கு மேலே இருக்கின்ற அடிப்படை உறுப்பினர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். சுமார் 5 லட்சம் அபிடவிட்டுகள் தேர்தல் ஆணையத்தின்முன்பு சமர்பிக்க இருக்கிறோம். 1 கோடி தொண்டர்கள் எங்களுக்கு உறுப்பினர் அட்டையோடு ஆதரவை வழங்கி உள்ளார்கள். கோவையில் நடக்கும் இந்த கூட்டம் நடந்து முடியும்போது உண்மையாண அ.தி.மு.க நாங்கள்தான் என்ற அறிவிப்பு தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரும் .

ஜெயலலிதாவின் ஆட்சி ஓ.பி.எஸ் தலைமையில் தமிழகத்தில் அமையும். அரசு கவிழ்கிறது என்பது தினகரனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை.

60 நாள் கெடு என்பது தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உள்ளது. அதைெ பாறுத்தமட்டில் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமில்லை. விரைவில் ஆட்சிமாற்றம் ஓ.பி.எஸ் தலைமையில் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.