கயத்தாறு:
கயத்தாறு 2-வது வார்டுக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதி பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டிற்கு செல்லும் பாதை தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த பாதையை மீட்க கோரி பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பாரதிநகரை சேர்ந்த மாடசாமி மனைவி கருப்பாயி (வயது 90) என்பவர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு இறந்தார். இதையடுத்து சுடுகாட்டு பாதையை மீட்டு தந்தால் தான் கருப்பாயி உடலை அடக்கம் செய்வோம் என அப்பகுதி பொதுமக்கள் கூறி இன்று காலை கயத்தாறு-தலையால் நடந்தான்குளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கயத்தாறு போலீசார் மற்றும் தாசில்தார் முருகானந்தம் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாதையை மீட்டால் தான் உடலை அடக்கம் செய்வோம். இல்லா விட்டால் மூதாட்டி உடலை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் கூறி உள்ளனர்.