செய்திகள்

காட்பாடி அருகே போலீஸ்காரரை தாக்கிய ராணுவ வீரர் கைது

காட்பாடி அருகே போலீஸ்காரரை தாக்கியது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்:

காட்பாடி அடுத்த லத்தேரி மாலீயபட்டு கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

இதையொட்டி விழா குழுவினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பனமடங்கி போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஊர் இளைஞர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனமாடி கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ்காரர் சதீஷ் தட்டி கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 6 இளைஞர்கள் சரமாரியாக சதீஷை தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 27) ராணுவ வீரர். அவரது சகோதரர் சிலம்பரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடிவருகின்றனர்.