காசிமேட்டில் மீன் வாங்க திரண்ட கூட்டம். 
செய்திகள்

காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்

புரட்டாசி மாதம் முடிவடைந்ததால் காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் ஏராளமானோர் குவிந்தனர். வஞ்சிரம் ரூ. 2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

மாலை மலர்

ராயபுரம்:

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்ப்பது வழக்கம். கடந்த 17-ந் தேதியுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. இன்று புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக அசைவ பிரியர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அதிகாலை முதலே ஏராளமானோர் திரண்டதால் காசிமேடு மீன் மார்க்கெட் களைகட்டியது. இதனால் மீன்களின் விலை உயர்ந்தது.

இதுவரை ரூ. 400, ரூ. 500-க்கு விற்பனை செய்த மீன்கள் ஆயிரம் ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வஞ்சிரம், பாரை, கொடுவா, சங்கரா, மத்தி, கிழங்கா மீன்கள் விலை அதிகமாக இருந்தது. இதனால் சிறிய வகை மீன்களை மக்கள் போட்டி போட்டு வாங்கினர். 

ரூ.  600-க்கு விற்ற வஞ்சிரம் ரூ. 1600 முதல் ரூ. 2000  வரை விற்பனை ஆனது. இறால் வரத்து குறைவாக இருந்தது. வாளை மீன் வரத்து அதிகமாக உள்ளதால் காசிமேடு மீன் வியாபாரிகள் மத்தியில் வாளை மீன் அதிகமாகவே காணப்பட்டது.

இதற்கிடையே காசிமேடு மீனவர் வலையில் 400 கிலோ எடையுள்ள எமன் கோலா மீன் சிக்கி உள்ளது. காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் குமரேசன். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றார். அப்போது அவருடைய வலையில் ராட்சத மீன் சிக்கியது. அதனை காசிமேடு கடற்கரைக்கு மீனவர்கள் உதவியுடன் கொண்டு வந்தார். வலையில் சிக்கியது எமன் கோலா என்ற அரிய வகை மீன் என்பது தெரிந்தது.