காசி 
செய்திகள்

காசி வழக்கு- போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

காசி வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

சென்னை பெண் டாக்டர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி, அவருடைய நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கந்து வட்டி வழக்கில் உரிய விசாரணை நடத்தாததால் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் என சுமார் 7 பேரிடம் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையானது இன்னும் 2 அல்லது 3 நாட்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கந்துவட்டி வழக்கில் வங்கி கடனில் இருந்த மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் கடன் செலுத்தி முடிவதற்குள் எப்படி காசி பெயருக்கு மாற்றப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. வங்கி அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உதவி இன்றி ஆவணங்களை மாற்றியிருக்க முடியாது என்பதால் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதோடு வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடக்கிறது.