கரூர்:
கரூர் மாவட்டத்தில் பணிக்கு வராத போக்கு வரத்து தொழிலாளர்கள் 640 பேருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இன்று பணிக்கு திரும்பினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாது என்று அமைச்சர் தெரிவித்ததையடுத்து கரூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் பணிக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 75 டிரைவர்கள் மற்றும் 62 கண்டக்டர்கள் பணிக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கரூர் மாவட்டத்தில் போராட்டத்தின் போது கல்வீச்சு, தற்காலிக டிரைவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கரூர் குளித்தலை பணிமனை டிரைவர் ரெங்கராஜ், திருச்சி மலைக்கோட்டை பணிமனை கண்டக்டர் முருகேசன், திருச்சி மாவட்டம் முசிறி பணிமனை கண்டக்டர் கணேசன், துறையூர் பணிமனை கண்டக்டர் செல்வம், கரூர்-2 பணிமனை கண்டக்டர்கள் ஈஸ்வர மூர்த்தி, மதன்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் 6 பேரையும் சஸ்பெண்டு செய்து கரூர் மண்டல போக்குவரத்து அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கண்டக்டர்கள், டிரைவர்கள் சிலரை மாவட்டத்தில் உள்ள வேறு டெப்போக்களுக்கு நேற்று இரவு அதிரடியாக இடமாற்றம் செய்து உள்ளனர். இதில் குறிப்பாக வேலைக்கு செல்பவர்களை தடுப்பவர்கள் மற்றும் போராட்டத்தை தூண்டுபவர்களை வேறு டெப்போக்களுக்கு மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
மேட்டூர் டெப்போவில் டிரைவராக பணிபுரியும் சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கத்தைச் சேர்ந்த செம்பான் என்பவரை ஆத்தூர் டெப்போவுக்கு மாற்றி உள்ளனர். இதேபோல மேலும் பலரை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் சென்று திரும்பிய அரசு பஸ் கண்ணாடி மீது ஆண்டியப்பனூர் அருகே கல்வீசப்பட்டது. அதில் பஸ் கண்ணாடி உடைந்தது.
இது தொடர்பாக திருப்பத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அரசு பஸ் மீது கல்வீசியது. திருப்பத்தூரை சேர்ந்த பஸ் கண்டக்டர் பழனி என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். மேலும் பஸ் டெப்போவில் ரகளை செய்ததாக போக்குவரத்து தொழிலாளர்கள் தேவராஜ், நாராயணன், கார்த்திகேயன், சீனிவாசன், சரவணக்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.