கரூர்:
பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு கரூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்குகள் சம்பந்தமாக 6 வாரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதி, அவர் 6 வாரம் கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். அதை அவரது வக்கீல் கரூர் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.
இந்நிலையில் இன்று கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுப்பையா, அடுத்த மாதம் 15-ந்தேதி நடிகர் எஸ்.வி. சேகர் கரூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். #SVeShekher