சென்னை :
மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகள் செல்வி, அவரது கணவர் செல்வம் ஆகியோரின் மருமகன் டாக்டர் ஜோதிமணி, அவரது நண்பர் ஜாகீர் அகமத்தமான் ஆகிய இருவரும் 20 சதவீத கமிஷனுக்கு பணத்தை மாற்றித்தருவதாக கூறி அழகுசாதன வியாபாரி தினேஷ் என்பவரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதற்கிடையே, ‘மருமகன் செயல்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று கருணாநிதியின் மகள் செல்வி, பத்திரிகைகளில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘எங்கள் மருமகன் டாக்டர் வி.எம்.ஜோதிமணியின் எந்த செயல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவற்றிற்கு நாங்கள் பொறுப்புமல்ல’’ என்று கூறப்பட்டுள்ளது.