செய்திகள்

முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்கும் கார்த்தி சிதம்பரம்

முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும்படி கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ.யிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாலை மலர்

ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா மற்றும் அதன் இயக்குனர்கள் பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது சி.பி.ஐ. கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு கிடைத்த முதலீட்டை வெகுவாக குறைத்து காட்டி உதவி செய்ததாகவும், அதன் மூலம் ஆதாயம் அடைந்ததாகவும் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. இந்த வழக்கை பதிவு செய்தது. இதுதொடர்பாக ஏற்கனவே, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

இந்நிலையில், முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும்படி கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.