கைதான கார்த்திகேயன் 
செய்திகள்

என் மகன் கைதுக்கு அரசியல் காரணம் - கார்த்திகேயனின் தந்தை பேட்டி

முன்னாள் மேயர் கொலையில் அரசியல் தூண்டுதல் காரணமாக என் மகன் கைது செய்யப்பட்டுள்ளான். சட்டப்படி அவன் நிரபராதி என்பதை நிரூபிப்போம் என கார்த்திகேயனின் தந்தை சன்னாசி கூறினார்.

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை வழக்கில் தி.மு.க. நிர்வாகி சீனியம்மாள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தற்போது மதுரையில் மகள் வீட்டில் வசிக்கும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இந்த கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொலை வழக்கில் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மதுரையில் உள்ள சீனியம்மாளை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் நிருபர்களை சந்திக்க மறுத்துவிட்டார். அவரது கணவர் சன்னாசி தொலைபேசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை வழக்கில் எனது மகன் கார்த்திகேயன் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் தூண்டுதல் காரணமாகத்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்த்திகேயன் நிரபராதி என்பதை சட்டப்படி நிரூபிப்போம். பொறியியல் பட்டதாரியான அவனுக்கு ஆந்திராவில் வேலை கிடைத்துள்ளது. வருகிற 1-ந்தேதிக்கு பிறகு வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT