செய்திகள்

சந்திர கிரகண பீதியால் சொந்த ஊர்களில் தஞ்சம் புகுந்த கர்நாடக மந்திரிகள்

சந்திர கிரகணத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நினைத்ததால் கர்நாடக மந்திரிகள் சிலர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #chandragrahan

மாலை மலர்

பெங்களூர்:

சந்திரகிரகணம் நேற்று நள்ளிரவு ஏற்பட்டது. இது இந்த ஆண்டின் மிக நீண்ட நேர கிரகணமாக 4 மணிநேரம் நீடித்தது.

இந்த கிரகணம் ஜோதிட ரீதியாக 8 நட்சத்திரக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான பரிகாரமும் கூறப்பட்டது.

கர்நாடகத்தில் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட மந்திரிகள் சிலர் கிரகணம் தொடர்பாக தங்களது ஆஸ்தான ஜோதிடர்களை சந்தித்து ஆலோசனைகளை கேட்டுக்கொண்டனர்.

அதன்படி கிரகணத்தின் போது சில மந்திரிகள் பெங்களூரில் தங்காமல் சொந்த ஊருக்கே சென்று விட்டனர். கிரகணம் நள்ளிரவு தான் ஏற்படுகிறது. ஆனால் மந்திரிகளை முதல் நாளே பெங்களூரை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு ஓட்டம் பிடித்து விட்டனர். இதனால் பெங்களுரில் நேற்று மந்திரிகள் அறைகளில் கூட்டம் இல்லை. தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

உயர் கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவகவுடா உள்பட 26 மந்திரிகள் மட்டுமே நேற்று பெங்களூரில் தலைமைச் செயலகத்தில் இருந்து அலுவல்களை கவனித்தனர். 20-க்கும் மேற்பட்ட மந்திரிகள் சந்திரகிரகணம் என்பதால் ஊரிலே இல்லை. இதனால் மந்திரிகளை சந்திக்க வரும் மக்களின் கூட்டம் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் மூத்த காங்கிரஸ் மந்திரி ஒருவர் இந்த தகவலை மறுத்தார். மந்திரி பரமேஸ்வராவின் சகோதரர் சிவபிரசாத் இறந்துவிட்டதால் துக்கம் விசாரிப்பதற்காக அனைவரும் தும்கூர் சென்று விட்டனர் என்றார்.

கர்நாடகத்தின் சிக்கமகளூர் என்.ஆர்.புரா தாலுகாவில் உள்ள கிராமத்தில் ஹாவுகொல்லா என்ற பழங்குடியின மக்கள் 25 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் கிரகணத்தின் போது வீட்டில் இருக்கக் கூடாது என்று கருதி வீடுகளை விட்டு வெளியேறினார்கள். #chandragrahan