செய்திகள்

கர்நாடகாவில் கண்காணிப்பு தீவிரம் - காரில் கொண்டு சென்ற ரூ.2.17 கோடி பறிமுதல்

கர்நாடகத்தில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையின்போது, காரில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2.17 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #KarnatakaElections2018

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அனைத்து பகுதிகளிலும் வாக்குச்சீட்டு கொடுக்கும் பணி நடைபெறுகிறது. அப்போது வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்யலாம் என்ற தகவல் பரவியதால், போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், சித்ரதுர்கா மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில், 2.17 கோடி ரூபாய் பணம் இருந்தது. காரில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணம் இல்லை.

முறையான ஆவணம் இல்லாமல் பணத்தை கொண்டு சென்றதாக கூறி அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.