பெங்களூரு:
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வராவின் தனி உதவியாளராக இருந்தவர் ரமேஷ். பெங்களூரு ஞானபாரதி பகுதியில் வசித்த இவர் இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
பரமேஸ்வராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ. 4 கோடியே 52 லட்சம் பணம் சிக்கியது. மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்களை சேர்த்து அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் பரமேஸ்வராவின் உதவியாளர் இன்று தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.