செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு இந்திரா உணவகம் - ராகுல் காந்தி இன்று திறந்து வைத்தார்

கர்நாடக மாநிலத்தில் குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின்கீழ் மேலும் ஒரு இந்திரா உணவகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று திறந்து வைத்தார். #rahulgandhi #IndiraCanteen #KarnatakaCongress

பெங்களூரு:

தமிழகத்தின் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு மலிவு விலை உணவகங்கள் துவங்கப்பட்டது. இந்த வகை மலிவு விலை உணவகம் ஏழை எளிய மக்களுக்கு பயன்மிக்கதாய் விளங்கியதால் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்த அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா முடிவு செய்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் இந்த திட்டத்தை 16-8-2017 அன்று காங்கிரஸ் (முன்னாள்) துணைத்தலைவர் ராகுல் காந்தி துவக்கி வைத்தார். அம்மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் அதிமான பகுதிகளில் துவங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு இந்திரா உணவகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த உணவகத்தில் காலை சிற்றுண்டி ஐந்து ரூபாய்க்கும் இரவு உணவு பத்து ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள கர்நாடக மாநிலத்தில் தற்போது சுற்றுப்பயணம் செய்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாம்ராஜ்நகர் மாவட்டம், கொல்லேகாலா பகுதியில் இன்று மேலும் ஒரு இந்திரா உணவகத்தை திறந்து வைத்தார்.

அந்த உணவகத்தில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் அமர்ந்து ராகுல் காந்தியும் உணவு உண்டார். #tamilnews #rahulgandhi #IndiraCanteen #KarnatakaCongress