காரிமங்கலம்:
காரிமங்கலம ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் அனுமந்தபுரம் ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த திட்டத்தில் சொன்னம்பட்டியை சேர்ந்த பெண்களுக்கு தொடர்ந்து பணி வழங்கி வருவதாகவும் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மத்தநேலிக்கொட்டாய், வைய்யாலிக்கொட்டாய், மொட்டையன்கொட்டாய், முனியப்பன் கோவில் கொட்டாய் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு பணி வழங்காமல் புறக்கணித்து வருவதாகவும் புகார் எழுந்தது.
இந்தநிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு சமமாக பணி வழங்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.